லே,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக ஏப்ரல் 30-ந்தேதி லடாக் செல்ல உள்ளார். மே 1-ந்தேதி புத்த பூர்ணிமா தினத்தையொட்டி, புத்த பகவானின் புனிதப் பொருட்களுக்கு அமித்ஷா மரியாதை செலுத்துவார் என லடாக் துணைநிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.
அதே சமயம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லடாக் குழுக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான துணை குழுக் கூட்டத்தை மே 22-ந்தேதி நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக வினய் குமார் சக்சேனா தெரிவித்தார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்தது.
இதனிடையே, லடாக் பிராந்தியத்தின் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, மே 22-ந்தேதி திட்டமிடப்பட்டுள்ள துணை குழுக் கூட்டம் போதுமானது அல்ல என்று தெரிவித்துள்ள லே உச்ச அமைப்பு(LAB), அடுத்த வாரம் லடாக் வருகை தரும் அமித்ஷா தங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்புகள் உள்ளிட்ட 4 அம்ச செயல்திட்டம் தொடர்பாக, லடாக் தலைவர்கள் மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி(KDA) ஆகியோர் இணைந்து 2021 முதல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.