தேசிய செய்திகள்

மும்பையில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

6 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.

மும்பை

மராட்டியத்தின் மும்பை நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்து உள்ளது.

மராட்டியத்தின் மும்பை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கத்கோபர் பகுதியில் சிராக் நகர் என்ற இடத்திற்கு உட்பட்ட கவுசியா சாவ்ல் என்ற குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், மலையடிவாரத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில், அதன் மண் மற்றும் இடிபாடுகள் அருகில் இருந்த 5 முதல் 6 வீடுகளின் மீது விழுந்தன.

6 பேர் மீட்பு

இதுபற்றிய தகவல் அறிந்து மும்பை தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

எனினும், இதில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதுதவிர 5 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சூழலில், மும்பையில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 2 மற்றும் 3 வயதுடைய 2 குழந்தைகளும் அடங்குவர். 6 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.