தேசிய செய்திகள்

கேரளாவில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

பொறியில் இருந்து விடுபட சிறுத்தை முயற்சி செய்தபோது அதன் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலூர் பகுதியில், கே.பி.ஆர். நகரில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வந்ததால், அவற்றைப் பிடிக்க பொறி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிகாலை நேரத்தில் ஏதோ ஒரு மிருகத்தின் உறுமல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பாத்தபோது, சிறுத்தை ஒன்று பொறியில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.

இது குறித்து உடனடியாக கொட்டியூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், பொறியில் சிக்கியிருந்த சிறுத்தையின் உடலில் மயக்க ஊசி செலுத்தினர். இருப்பினும் பொறியில் இருந்து விடுபட முயற்சி செய்தபோது அந்த சிறுத்தையின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால், சிறிது நேரத்தில் சிறுத்தை உயிரிழந்தது.

இந்நிலையில், சட்டவிரோதமாக வனவிலங்குகளுக்கு வைக்கப்பட்டிருந்த பொறி குறித்து விசாரணை நடத்தவும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட இடம் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், காட்டுவிலங்குகள் அடிக்கடி அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.