போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று டெலிவரி ஊழியரை தாக்குவதற்காக பாய்ந்த காட்சி வீடியோ வைரலானது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரின் பிச்சோலி மார்தானா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு சிறுத்தை ஒன்று திடீரென நுழைந்தது. அப்போது அங்கு உணவு வழங்க வந்த டெலிவரி ஊழியர் ஒருவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்த சிறுத்தை, புதர்களுக்குள் இருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்க முயன்றது. இதில் நிலைகுலைந்த ஊழியர் பைக்குடன் கீழே விழுந்தார். எனினும், சாதுரியமாக செயல்பட்ட அவர், உடனடியாக பைக் மற்றும் பார்சல்களை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தார். இதனால் அவர் நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார்.
டெலிவரி ஊழியர் தப்பியதைத் தொடர்ந்து, அந்த சிறுத்தை அருகிலிருந்த ஒரு வீட்டின் குளியலறைக்குள் நுழைந்து ஒளிந்து கொண்டது. இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினரும் போலீசாரும், அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்பாகப் பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை அங்கிருந்து தப்பிவிட்டது. அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே, பிச்சோலி மார்தானா பகுதி மக்கள் இரவு நேரத்தில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.