திருப்பதி, -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்கின்றன.இந்த பாதையில் நரசிம்ம சுவாமி கோவிலுக்கு அருகில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனைக் கண்ட பக்தர்கள் பீதியடைந்து அலறிக்கொண்டு ஓடினர்.நடைபாதைகள் வழியாக திருமலைக்குச் செல்லும் பக்தர்களுக்காக அதிகாரிகள் சில முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக இரவில் பயணம் செய்யும்போது, பக்தர்கள் தனியாகப் பயணிக்காமல் குழுக்களாகச் செல்ல வேண்டும்.சிறு குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் தங்கள் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.வனத்துறை ஊழியர்கள் நடைபாதையில் ரோந்துப் பணியில் ஈடுபடுவதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
.மேலும், பக்தர்கள் எந்தவிதமான பதற்றத்தையும் சந்திக்காத வகையில், பாதுகாப்பு ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி கோவிலில் நேற்று 73,265 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39,690 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.