தேசிய செய்திகள்

‘பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்கும் சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு

படித்த, அதிகாரம் பெற்ற பெண்கள் முற்போக்கான நாட்டின் தூண்கள் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது;-

“அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்! படித்த மற்றும் அதிகாரம் பெற்ற பெண்கள் ஒரு முற்போக்கான நாட்டின் தூண்கள் ஆவர். பெண் சக்தி பல்வேறு துறைகளில் தொடர்ந்து சிறந்து விளங்கி, தைரியத்துடன் வழிநடத்துவதோடு, சமூகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.

இந்த சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு பெண்ணும் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன் வளரவும், வாழவும், சம வாய்ப்புகள் வழங்கும் ஒரு சமூகத்தை உருவாக்க நாம் உறுதியேற்போம். பெண்கள் தங்கள் விருப்பங்கள் மற்றும் சாதனைகள் மூலம் சமமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான சூழலை நாம் ஒன்றாக உருவாக்குவோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.