சாய், சிரீஷா 
தேசிய செய்திகள்

கடன் தொல்லை: 3 வயது மகனை நடுரோட்டில் தவிக்கவிட்டு ஆற்றில் குதித்து தம்பதி தற்கொலை

கடன் கொடுத்தவர்களின் நெருக்குதலுக்கு பயந்தே தம்பதி இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

ராஜமகேந்திரவரம்,

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், கடன் தொல்லை காரணமாக 3 வயது குழந்தையை தனியாக தவிக்கவிட்டு, தம்பதியினர் பாலத்தின் மீதிருந்து கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்கூட்டரில் வந்த தம்பதி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய். இவருடைய மனைவி சிரீஷா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.

ஆற்றில் குதித்து விபரீத முடிவு

பாலத்தின் நடுவே சென்றபோது சாய் திடீரென ஸ்கூட்டரை நிறுத்தினார். பின்னர் கணவனும், மனைவியும் தங்களது 3 வயது மகனை ஸ்கூட்டரிலேயே தனியாக அமரவைத்தனர். குழந்தை பார்ப்பதற்குள், இருவரும் கைகோர்த்தபடி பாலத்தின் மேலிருந்து ஆர்ப்பரித்து ஓடும் கோதாவரி ஆற்றில் குதித்தனர்.

நடுநிசி இருளில் பெற்றோர் ஆற்றில் குதித்ததை அறியாத அந்த பச்சிளம் குழந்தை, "அம்மா... அப்பா..." என கதறியபடி அழுதுகொண்டே இருந்தது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், நள்ளிரவில் குழந்தை மட்டும் தனியாக அழுதுகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

கடன் தொல்லை காரணம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டு விசாரித்தனர். அங்கு நின்ற ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சாய்-சிரீஷா தம்பதிக்கு கடுமையான கடன் சுமை இருந்ததாகவும், இதனால் அவர்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. கடன் கொடுத்தவர்களின் நெருக்குதலுக்கு பயந்தே அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர்.

தேடுதல் வேட்டை

கோதாவரி ஆற்றில் வெள்ளம் அதிகமாக உள்ளதால், ஆற்றில் குதித்த தம்பதியை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. தற்பொழுது மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தம்பதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.