புதுடெல்லி,
வேளாண் மக்களின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 26ந்தேதி விவசாயிகளில் ஒரு பிரிவினர் அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி சலோ என்ற பெயரில் பேரணியாக புறப்பட்டு சென்றனர்.
அவர்களுடன் வேறு சில மாநில விவசாயிகளும் இணைந்து கொண்டனர். கடந்த 2 மாதங்களுக்கும் கூடுதலாக போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இதற்கிடையே, அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
இந்த சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இந்த பேரணியில், விவசாயிகளில் ஒரு தரப்பினர் போலீசார் அனுமதி அளித்த நேரம் மற்றும் தடம் ஆகியவற்றை பின்பற்றாமல் அத்துமீறி தடுப்புகளை உடைத்து கொண்டு முன்னேறினர்.
இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் மத கொடி ஒன்றையும் நட்டனர். இந்த சம்பவத்தில், போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் மோதல் ஏற்பட்டது. டிராக்டர் பேரணியில், விவசாயிகள் கடுமையாக தாக்கியதில் 83 போலீசார் காயம் அடைந்து உள்ளனர் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லி போலீசின் துணை ஆணையாளர் சின்மொய் பிஸ்வால், சன்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினை சேர்ந்த தர்சன் பால் என்பவருக்கு விளக்கம் கேட்டு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட பாதைகளில் செல்ல டெல்லி போலீசார் வழங்கிய அனுமதிக்கான ஒப்பந்தம் மீறப்பட்டு உள்ளது.
இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காக உங்கள் மீதும் மற்றும் உங்களுடைய கூட்டாளிகள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? என கேட்டு அடுத்த 3 நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கும்படி கேட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் டிராக்டர் பேரணியை முடித்து கொண்டு திரும்பிய விவசாயிகள், சிங்கு எல்லையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த சூழலில், சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளை உடனே காலி செய்து விட்டு அங்கிருந்து கிளம்ப வேண்டும் என கோரி உள்ளூர் மக்கள் சிலர் நேற்று ஒரு குழுவாக சேர்ந்து அந்த பகுதியில் திரண்டனர்.
அவர்கள் சிறிய அளவிலான தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சிங்கு எல்லையில் (டெல்லி-அரியானா எல்லை) இன்று மீண்டும் 2வது நாளாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளை காலி செய்ய கோரி அவர்கள் தேசிய கொடிகளை ஏந்தியபடி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், வன்முறை ஏற்பட்டு விடாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.