புதுடெல்லி
இந்தியாவில் சத்தீஷ்கார், தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் அடர்ந்த வன பகுதிகளில் ஊடுருவி வளர்ச்சி அடைந்து வந்தனர். அவர்கள், அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கிராம மக்களையும், கலெக்டர், கவுன்சிலர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்துவதும், கடத்தி செல்வதும் கடந்த காலத்தில் நடந்தது. இது, அரசுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியது.
அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஏற்ப அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்தது. சில தேடப்படும் நக்சலைட்டுகளின் தலைக்கு பரிசு தொகையை அறிவித்தது. சரண் அடையும்படியும், ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வலியுறுத்தியும் வந்தது. இதில், அரசு வேண்டுகோளை ஏற்று கடந்த சில ஆண்டுகளாக நக்சலைட்டுகள் பலர் போலீசார் முன் சரணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் நக்சல்வாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த காலத்தில் கூறினார். இந்த சூழலில், மக்களவையில் விதி எண் 193-ன் கீழ், இடதுசாரி தீவிரவாதத்தில் இருந்து நாடு விடுபடுவதற்கான முயற்சிகள் என்ற தலைப்பில் வருகிற 30-ந்தேதி விவாதம் நடைபெற பட்டியலிடப்பட்டு உள்ளது.
இதற்கு எந்தவித தீர்மானம் இயற்றவோ அல்லது வாக்கெடுப்போ தேவையிருக்காது. இதற்கான நோட்டீசை தெலுங்குதேச கட்சியின் எம்.பி. பைரெட்டி சபரி மற்றும் சிவசேனா உறுப்பினர் ஷிகாந்த் ஷிண்டே ஆகியோர் வழங்கினர்.