போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற நர்வார் கோட்டை உள்ளது. ராஜபுத்திரர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை பின்னர் முகலாயர்கள் கட்டுப்பாட்டிலும் இருந்தது.
இதனிடையே, இந்த கோட்டையில் பழங்கால போர் கருவிகள், பீரங்கி, குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அந்த வகையில் இந்த கோட்டையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கி உள்பட 14 பீரங்கிகள் பாதுகாக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்த கோட்டையில் இருந்த 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரங்கியை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில் சர்வதேச கடத்தல் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.