தேசிய செய்திகள்

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு

காரில் பயணம் செய்த 6 பேர் உடல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

போபால்,

மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பஞ்சக் வாசா பகுதி அருகே இன்று மதியம் 1.30 மணியளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது, எதிர்த்சையில் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த 6 பேர் உடல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் குஜராத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கண்டெய்னர் லாரியின் ஓட்டுநரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.