போபால்,
மத்தியப்பிரதேசத்தில் வனத்துறை அதிகாரி ஒருவர் மானுக்கு அவல் ஊட்டியதால் பனியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மத்தியப்பிரதேச மாநிலம், நர்மதாபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற தேசிய பூங்கா மற்றும் சத்ரா புலிகள் காப்பகம் அமைந்துள்ளன. இங்கு உதவி இயக்குநராகவும், போரி வனச்சரகத்தின் பொறுப்பாளராகவும் வினோத் வர்மா பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் அவர் காட்டுக்குள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு போகா எனப்படும் அவலை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பெரிய சாம்பார் ரக மான் அவருக்கு பக்கத்தில் வந்தது. உடனே அந்த மானை வினோத் வர்மா தலையில் தடவிக்கொடுத்து தன்னிடமிருந்த அவலை ஊட்டி இருக்கிறார்.
மேலும் ஒரு காட்டு மானுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தை காட்டுவதற்காக அவரே இந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாநிலையில், பலரும் வினோத்தை பாராட்டினர்.
அதேசமயம் அஜய் துபே என்ற பிரபல வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கண்ணில் இந்த வீடியோ பட்டநிலையில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது மிகப்பெரிய விதிமீறல் என்பதை சுட்டிக்காட்டி, வீடியோ ஆதாரத்துடன் மத்திய பிரதேச வனத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வினோத் வர்மா மீது வழக்குப்பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.