மராட்டியத்தில் போலி பால் விற்பனை 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விற்பனை: டிடர்ஜென்ட் பவுடர் கலந்து தயாரிப்பா?

பால் பண்ணையில் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மும்பை,

மராட்டியத்தில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்து 2.3 கோடி லிட்டர் போலி பால் விற்பனை செய்யப்பட்டது.

போலி பால் விற்பனை

மராட்டியம் மாநிலம், தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஒரு பால் பண்ணையில் குறைந்த தரம் கொண்ட மில்க் பவுடர், ரசாயன பவுடர், பாமாயில் மற்றும் சில ஆபத்தான ரசாயனங்களை ஒன்றாகக் கலந்து 'செயற்கை பால்' தயாரிக்கப்பட்டுள்ளதாக என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் 23 லட்சம் லிட்டர் போலி பாலை தயார் செய்தனர். மேலும் கடந்த 6 மாதங்களாக செயற்கை பாலை அசல் பாலுடன் கலந்து ஒட்டுமொத்தமாக 2.3 கோடி லிட்டர் கலப்படப் பாலாக மாற்றி சந்தையில் விற்றுள்ளனர்.

அரசின் அதிரடி நடவடிக்கை

இந்த மோசடி குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று அதிரடி ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யதனர்.

மேலும் வழக்கை தீவிரமாக விசாரிக்க மராட்டிய அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. பால் பண்ணையில் பயன்படுத்தப்பட்ட ரசாயனப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை

டிடெர்ஜென்ட் மற்றும் ரசாயனங்கள் கலந்த இந்த நச்சுப் பாலைத் தொடர்ந்து குடிப்பதால் மனிதர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், உயிருக்கே ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.