மும்பை,
மராட்டிய மாநிலத்தில் உள்ள லாத்தூரில் கடந்த 1993-ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை 8.33 மணியளவில் யவத்மால் மாவட்டம் சாதுநகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்தபடி வெளியே ஓடிவந்தனர்.
மேலும் நிலநடுக்க பயத்தில் சிறிதுநேரம் தெருக்களில் நின்று கொண்டு இருந்தனர். யவத்மாலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
யவத்மாலை சுற்றி உள்ள பகுதிகளிலும் நேற்று லேசான நில அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர். இதுகுறித்து நாந்தெட் மாவட்ட கலெக்டர் விபின் இடான்கர் கூறுகையில், நாந்தெட்டிலும் லேசான அதிர்வை பொதுமக்கள் உணர்ந்தனர் என்றார். மேலும் அவர் யவத்மால் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும் தெரிவித்தார்.