தேசிய செய்திகள்

நடுரோட்டில் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய கும்பல் - அதிர்ச்சி வீடியோ

இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருபவர் குர்னால் சிங் (வயது 35). இவர் கடந்த 28ம் தேதி தனது காதலியுடன் காரில் சென்றுள்ளார்.

தாக்குதல்

மன்கப்பூர்சவுக் பகுதியில் சென்றபோது பைக்கில் வந்த சிலர் கார் மீது பைக்கால் மோதியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த குர்னால் சிங் காரை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பின்னர் காரை விட்டு இறங்கிய குர்னால் சிங் மீது பைக்குகளில் வந்த 14 பேர் பயங்கர ஆயுதங்களால் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குர்னால் சிங் படுகாயமடைந்தார்.

கைது

இதையடுத்து, குர்னால் சிங்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குர்னால் சிங்கை தாக்கிய 14 பேரை கைது செய்தனர். மேலும், 5 பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குர்னால் சிங்கை நடுரோட்டில் வைத்து கும்பல் தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 14 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.