மும்பை,
இந்து மதக்கடவுள் விநாயகர். ஆண்டுதோறும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி மராட்டிய மாநிலத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று புதிதாக செய்யப்பட்ட விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டது.
தெற்கு மும்பையின் ஜெய் அம்பெ சவுக் பகுதியில் உள்ள பலராம் மெர்சண்ட் சாலையில் நேற்று இரவு 10 மணிக்கு வாகனத்தில் வைத்து விநாயகர் சிலை கொண்டுவரப்பட்டது. விநாயகர் சிலையை காண ஏராளமானோர் அந்த வாகனத்தை சுற்றி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விநாயகர் சிலை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக 7 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சங்கித் நிவ்சி (வயது 33), பிரிஜேஷ் ஹேமந்த் (வயது 30) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.