தேசிய செய்திகள்

மராட்டியத்தில் முதல்வர் பதவி தலா 2.5 ஆண்டுகள்; பாஜக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் - சிவசேனா விருப்பம்

மராட்டியத்தில் முதல்வர் பதவியை தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என பாஜக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க வேண்டும் என்று சிவசேனா விரும்புகிறது.

தினத்தந்தி

மும்பை,

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வெளியான தேர்தல் முடிவின் மூலம் மராட்டியத்தில் மீண்டும் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.

பா.ஜனதா தனித்து ஆட்சியை பிடிக்கும் நோக்கில் அதிக எண்ணிக்கையில் 164 தொகுதிகளில் போட்டியிட்டது. சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் தான் வழங்கப்பட்டன. ஆனால் தேர்தல் முடிவின் மூலம் பா.ஜனதாவின் கனவு பலிக்காமல் போய் விட்டது. தற்போது பா.ஜனதாவின் குடுமி சிவசேனா வசம் அகப்பட்டு கொண்டுள்ளது.

அதன்படி ஆட்சியில் சம பங்கு வேண்டும் என்று பா.ஜனதாவை சிவசேனா வலியுறுத்தி உள்ளது. முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் சிவசேனா மிகவும் பிடிவாதமாக உள்ளது.

இரு கட்சிகளும் ஆட்சியில் சம பங்கு குறித்து எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது குறித்து தங்களது கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர் . புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா மும்பையில் உள்ள மகாலட்சுமி ரேஸ்கோர்ஸில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், பதவியேற்பு விழா வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்தது.

இந்த நிலையில் உத்தவ் தாக்கரே இன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கூட்டத்தில் , பாஜகவின் மூத்த தலைவரான அமித் ஷா அல்லது தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரிடமிருந்து ஆட்சியில் சம பங்கு அதாவதது தலா 2.5 ஆண்டுகள் என எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,

இந்த தேர்தலில் சிவசேனா வரலாற்றில் முதல் முறையாக சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து அவரது பேரன் ஆதித்ய தாக்கரே போட்டியிட்டார். மும்பை ஒர்லி தொகுதியில் களம் இறங்கிய அவர் அமோக வெற்றி பெற்றார்.

கூட்டணி வெற்றி பெற்றால், ஆதித்ய தாக்கரே முதல்-மந்திரி அல்லது துணை முதல்-மந்திரி பதவி வகிப்பார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு பிறகு, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் முதலமைச்சர் பதவி மற்றும் ஆட்சியில் சம பங்கு, அரசு அமைப்பது குறித்து கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்