மும்பை,
இந்தியாவில் நடப்பு ஆண்டில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து டெல்லி, ராஜஸ்தான், மராட்டியம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் கடுமையாக வாட்டி வதைக்கிறது. வெப்ப அலையால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். அனல் காற்றும் வீசி வருகிறது.
வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல்வேறு வடமாநிலங்களில், மாணவர்களின் நலனை முன்னிட்டு பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. எனினும், வெயில் சார்ந்த பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில்,நாட்டிலேயே அதிகபட்சமாக இன்று மராட்டிய மாநிலம் பிரம்மபுரியில் 117 டிகிரி அளவு வெயில் பதிவாகியுள்ளது. (தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106.5° டிகிரி அளவு வெயில் கொளுத்தியது)
தீவிர வெப்பம் மனித உடலுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.