கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

செல்போனில் பேசியதை கண்டித்ததால் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

செல்போனில் வெகுநேரமாக பேசியதை கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் 11-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

மும்பையை அடுத்த தானே மான்பாடா பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இளம்பெண் சமிக்சா (20 வயது). இவர் நேற்று முன்தினம் இரவில் செல்போனில் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மாமா, சமிக்சாவை கண்டித்துள்ளார். மேலும் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தூங்க செல்லுமாறு கூறினார்.

இந்த செயலால் சமிக்சா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். உடனே வீட்டின் பால்கனிக்கு சென்ற அவர், கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை எதிர்பாராத அவரது மாமா உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சமிக்சாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சமிக்சா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT