மும்பை,
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில், 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, 19 வயது இளைஞர் சமீர் மகாலே என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தன்று குழந்தையின் தந்தை திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் குழந்தையின் தாயும், சகோதரனும் இருந்துள்ளனர். குழந்தையின் தாய் தண்ணீர் பிடிப்பதற்காக சிறிது நேரம் வெளியே சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த சமீர், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது குழந்தையின் சகோதரன் சத்தம் போட்டு தனது தாயை அழைத்த நிலையில், சமீர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை இருவரும் விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி சமீர் மகாலேவை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.