தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு: மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மல்லிகார்ஜுன கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா இன்று புகார் அளித்தது

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் பிரசாரத்துக்காக சென்னைக்கு நேற்று வந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பிரதமர் மோடியை தீவிரவாதி என்று குறிப்பிட்டதாக கூறி பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் பிரதமர் மோடியை தீவிரவாதி என்று கூறவில்லை என கார்கே தெரிவித்துள்ளார். விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை பா.ஜனதா அச்சுறுத்தி வருவதன் அடிப்படையில் தான் அந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்றும், தனிப்பட்ட முறையில் மோடியை விமர்சிக்கவில்லை என்றும் கார்கே கூறினார்.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா இன்று புகார் அளித்தது. மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு, அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் அடங்கிய பா.ஜனதா உயர்மட்டக் குழு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு சென்று, பிரதமர் மோடியை விமர்சித்த கார்கே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பிரதமர் மோடி குறித்த பேச்சு தொடர்பாக 24 மணி நேரத்தில் பதிலளிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.