கொல்கத்தா,
மேற்கு வங்காள சட்டசபைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் உள்ள பெதுவாடஹரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி காஜா ஆசிப் கொல்கத்தாவை தாக்குவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி ஏன் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கவில்லை? இதன் பின்னணி என்ன? தேர்தலுக்கு முன்பாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த ஏதேனும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதா? மத்திய அரசு மேற்கு வங்காள மக்களைக் குறிவைத்தால் அதனை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். இந்திய குடிமக்களாகிய நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களைச் சகித்து கொள்ளமாட்டோம். ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? உங்களுக்கு வெட்கமாக இல்லையா? நீங்கள் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேற்கு வங்காளத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், "தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒரு பஹல்காம் தாக்குதலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதா?" என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.