திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் போலீசாரின் ரோந்து கார் நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்திற்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து காரை திருடிச்சென்றார். போலீஸ் காரை அருகில் உள்ள பெட்ரோல் பங்க்-கிற்கு ஓட்டி சென்றுள்ளார்.
பின்னர், ரோந்து காரில் அருகே உள்ள உணவகத்திற்கு சென்ற அந்த நபர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றார். இதனால் சந்தேகமடைந்த உணவக ஊழியர்கள், இதுகுறித்து கன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரோந்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் போலீஸ் ரோந்து காரை திருடியது திரிச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஹம்சத் (வயது 49) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஹம்சத்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.