மும்பை,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சல்மான் கான். இவருக்கு திருமணமாகி ஹசின் பானு என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சல்மான் கான் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மராட்டிய மாநிலம் வாசிம் மாவட்டத்தில் வசித்து வந்தார்.
இதனிடையே, மனைவி ஹசின் பானுவின் நடத்தையில் சல்மான் கானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நிலவி வந்தது.
இந்நிலையில், சல்மான் கான் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் நேற்று மாலை காரில் வாசிம் மாவட்டம் கரஞ்ஜா பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் வைத்து கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சல்மான் கான் காரில் இருந்த இரும்பு கம்பியால் மனைவி ஹசின் பானுவை தாக்கியுள்ளார். பின்னர், குழந்தைகள் கண் முன்னே காரில் வைத்து மனைவி ஹசின் பானுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அதே காரில் மனைவியின் சடலத்துடன் கரஞ்ஜா போலீஸ் நிலையத்திற்கு சென்ற சல்மான் கான் மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரணடைந்தார்.
இதையடுத்து சல்மான் கானை கைது செய்த போலீசார், கொல்லப்பட்ட ஹசின் பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.