லக்னோ,
உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலியின் கணவரை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் இட்டாக் மாவட்டம் அம்ரோலி கிராமத்தை சேர்ந்த இளைஞர் கிஷோர். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த அனீஷ் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு கிஷோர் தனது கள்ளக்காதலியை சந்திக்க அனீசின் வீட்டிற்கு சென்றுள்ளார். அனீஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்றுள்ளார். கள்ளக்காதலியை சந்தித்துவிட்டு வீட்டில் இருந்து கிஷோர் வெளியே வந்துள்ளார். அப்போது, அனீஷ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
கிஷோரை கண்ட அனீஷ் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கள்ளக்காதலியின் கணவன் அனீசை கிஷோர் சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் அனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், கள்ளக்காதலியின் கணவரை சுட்டுக்கொன்ற கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.