தேசிய செய்திகள்

உ.பி.: நேபாள எல்லையில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இளைஞர் கைது

ரஞ்சித் கிரி என்ற இளைஞரை பாதுகாப்புப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திற்கு உத்தரபிரதேச மாநில எல்லையில் இருந்து சாலை போக்குவரத்து உள்ளது. இதனால் உத்தரபிரதேச எல்லை வழியாக தினமும் வாகனங்கள் நேபாளத்திற்கு செல்வதும், அங்கிருந்து வாகனங்கள் வருவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது.

இந்நிலையில், நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேச எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் எல்லையில் மகாராஜ்கஞ்ச் மாவட்ட சோதனைச்சாவடியில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் கடத்தி வரப்பட்ட 327 கிலோ கஞ்சா போதைப்பொருளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 20 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போதைப்பொருளை கடத்தி வந்த பீகாரை சேர்ந்த ரஞ்சித் கிரி என்ற இளைஞரை பாதுகாப்புப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.