தேசிய செய்திகள்

மங்களூரு: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 சிறுமிகள், தாய் உயிரிழப்பு

காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள நகோரி பகுதியில் நேற்று கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் அந்த பகுதியில் இருந்த ஒரு வீடு இடிந்து தரைமட்டமானது.

அந்த வீட்டில் 6 பேர் கொண்ட குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில், அவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரை பத்திரமாக மீட்டனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் சாந்தா(வயது 46) என்ற பெண்ணும், அவரது மகள்களான அனாமிகா(வயது 8) மற்றும் பாரி(வயது 4) ஆகிய இரண்டு சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவால் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT