இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் அமைதியை கொண்டு வர அரசு சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சில வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், கடந்த 7-ந்தேதி பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஆயுதக்குழுவினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 வயது ஆண் குழந்தையும், 6 மாத பெண் குழந்தையும் உயிரிழந்தனர். அந்த குழந்தைகளின் தாய் படுகாயமடைந்தார்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து மணிப்பூரில் போராட்டங்கள் வெடித்தன. இந்த தாக்குதல் தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல் மந்திரி கேம்சந்த் சிங் தெரிவித்தார்
இந்த நிலையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவீச்சு தாக்குதலில் குழந்தைகள் கொல்லப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் இருவரும் பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.