தேசிய செய்திகள்

மணிப்பூரில் பதற்றம்.. பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

மணிப்பூரில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இம்பால்,

மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டு, இன்று (ஆகஸ்ட் 20ம் தேதி) முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

மாநிலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு முன்னதாக 'தேசிய குடிமக்கள் பதிவேட்டை' (NRC) புதுப்பிக்க வலியுறுத்தி, 'நியாயமான தொகுதி மறுவரையறைக்கான இயக்கம்' (JFD) அழைப்பு விடுத்திருந்த 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்தின் இரண்டாவது நாளில், மணிப்பூரின் குறிப்பிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் அரசியல்வாதிகளின் உருவ பொம்மைகளை எரித்தும் பேரணிகளை நடத்தியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

சட்டம்-ஒழுங்கு சூழல்

தங்கள் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் புறக்கணிக்கப்போவதாகவும் ஜே.எப்.டி (JFD) அறிவித்துள்ளது.

இந்நிலையில் மாநிலக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில், "மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டு, அரசு, அரசு உதவி பெறும் அல்லது உதவி பெறாத துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகள் (அதாவது இடைநிலைக் கல்வி வாரியம், மேல்நிலைக் கல்வி கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அல்லது பிற வாரியங்களுடன் இணைக்கப்பட்டவை) மற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை ஆகஸ்ட் 20 முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை மூடுமாறு மணிப்பூர் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை மறியல்

இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர் மற்றும் தௌபால் மாவட்டங்களில் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ந்தன. பந்த் ஆதரவாளர்கள் தனியார் வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை வழிமறித்து, அவற்றை முன்னேறிச் செல்ல விடாமல் திருப்பிப்போகுமாறு வலியுறுத்தினர்.