புதுடெல்லி,
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, கடந்த 14-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும், அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசத்தில் சிரமம் ஏற்பட்டதால் லோக்நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் கடந்த 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேக்ஸ் மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் மாற்றப்பட்டார். கொரோனா வைரஸ் தொற்று உள்ள நிலையில், அடுத்தகட்ட சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சலும் இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் மனிஷ் சிசோடியாவை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட மனிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதன்பலனாக அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, சாதாரண வார்டுக்கு மனிஷ் சிசோடியா விரைவில் மாற்றப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.