தேசிய செய்திகள்

சரியான திட்டமிடுதல் இல்லாததால் 5 லட்சம் தடுப்பூசி டோஸ்களை மராட்டிய அரசு வீணடித்தது - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு

சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வீணடித்து விட்டதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவிலேயே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் திகழுகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் (1.26 லட்சம்) சுமார் பாதிபேர் மராட்டியர்கள் ஆவர்.

எனவே அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அத்துடன் தடுப்பூசி போடும் பணிகளும் வேகப்படுத்தப்பட்டு உள்ளன.

ஆனால் தங்கள் மாநிலத்தில் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக மாநில சுகாதார மந்திரி ராஜேஷ் தோப் குற்றம் சாட்டியுள்ளார். தங்களிடம் வெறும் 14 லட்சம் டோஸ்கள் மட்டுமே இருப்பதாகவும், இது 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் நேற்று முன்தினம் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி டோஸ்கள் இல்லாததால் பல மையங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மராட்டிய மந்திரியின் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், மத்திய அரசின் முந்தைய ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் மராட்டியத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. அங்கு தற்போது 23 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இது இன்னும் 5 முதல் 6 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் அதை வினியோகிக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும் என்று கூறினார்.

சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்ததாகவும், இது சிறு தொகை அல்ல என்றும் குற்றம் சாட்டிய ஜவடேகர், தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை என்றும் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...