புனே,
மராட்டியத்தில் இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்ப்பது தொடர்பாக முயற்சிகள் நடைபெறுகின்றன மற்றும் அந்த அமைப்புகளுடன் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டு உள்ளது என்பன போன்ற உளவு தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இதனை தொடர்ந்து, மராட்டியத்தின் அகல்யாநகர் மற்றும் யவத்மால் மாவட்டங்களில் உள்ள 21 இடங்களில் பயங்கரவாத ஒழிப்பு படையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், யவத்மால் மாவட்டத்தில் பூசத் மற்றும் உமர்கேத் பகுதிகளில் உள்ள 14 இடங்களிலும், அகல்யாநகர் மாவட்டத்தில் உள்ள 7 இடங்களிலும் சோதனை நடந்தது.
இதேபோன்று சந்தேகத்திற்குரிய 14 பேரை பிடித்து வீரர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சர்ச்சைக்குரிய ஆவணங்கள், மொபைல் போன்கள் மற்றும் மின்னணு பொருட்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன. சி.சி.டி.வி. கேமரா பதிவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என மராட்டிய பயங்கரவாத ஒழிப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.