தேசிய செய்திகள்

மராட்டியம்: பக்தர்கள் மீது லாரி மோதல்; 3 பெண்கள் பலி, 4 பேர் காயம்

அந்த 4 பேரும் ஜெஜூரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

புனே

புனேயில் லாரி மோதி பண்டர்பூருக்கு பாதயாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் உயிரிழந்தனர்.

பாதயாத்திரை

மராட்டியத்தில் ஆசாடி ஏகாதசியையொட்டி பிரசித்தி பெற்ற பண்டர்பூர் விட்டல் சாமி கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குழுவினர் பாதயாத்திரை செல்வது வழக்கம். இந்த பாதயாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்கள் 'வர்க்காரிகள்' என அழைக்கப்படுகின்றனர்.

புனே மாவட்டம் ஜெஜூ அருகில் சாங்கிலியை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை பாதயாத்திரை சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக பக்தர்களை ஏற்றி வந்த லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்று கொண்டு இருந்த பக்தர்கள் மீது மோதியது.

பெண் பக்தர்கள்

இந்த விபத்தில் பாதயாத்திரை சென்று கொண்டு இருந்த 7 பக்தர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜெஜூரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அப்போது பெண் பக்தர்களான நந்தா பவார் (வயது 70), மாதவி (வயது 55), ராஜஸ்ரீ (வயது 55) ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மற்ற 4 பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி டிரைவர் பாலாஜியை (வயது 70) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் லாரி டிரைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக மருந்து எடுத்து இருந்தது தெரியவந்துள்ளது. லாரி மோதி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பண்டர்பூருக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்து உள்ளது.