தேசிய செய்திகள்

மராட்டியம்: பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையுடன் 12-ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி

குழந்தை பிறந்த 2 நாளில் சித்தே, ஆங்கில தேர்வை எழுத வந்திருக்கிறார்.

நான்டெட்

மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (வயது 21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார்.

அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையையும் தூக்கியபடி வந்துள்ளார். அரசியல் அறிவியல் தேர்வுக்காக வந்த அவருக்கு, அந்த மையத்தில் உடனடியாக வசதிகள் செய்து தரப்பட்டன. குழந்தை தூங்க தொட்டில் ஒன்றையும் கொடுத்தனர்.

அதனை பாதுகாப்பாக தூங்க வைத்து விட்டு சித்தே தேர்வை எழுத சென்றார். குழந்தை பிறந்த 2 நாளில் சித்தே, கடந்த 10-ந்தேதி ஆங்கில தேர்வை எழுத வந்திருக்கிறார். அப்போது அவருடைய சகோதரி அவருக்கு வேண்டிய தேவைகளை செய்து கொடுத்திருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன் சித்தேவுக்கு திருமணம் நடந்தது. கணவர் தினமும் வேலைக்கு சென்று விடுவார். இதனால் குழந்தையை கவனிக்க ஆள் இல்லாத சூழலில், அதனை தூக்கி கொண்டு தேர்வு எழுத வந்துள்ளார்.

கல்வி மிக அவசியம் என்றும் அதனால், தாய் ஆன பின்னரும் குடும்பத்தினர் அதற்கு முழு ஆதரவு அளித்தனர் என கூறும் சித்தே, அதனால் தொடர்ந்து குழந்தையுடன் வந்து எல்லா தேர்வையும் எழுதும் முடிவில் இருக்கிறார்.