தேசிய செய்திகள்

துணை ராணுவ வீரர்களுக்காக திருமண தகவல் வலைத்தளம் - நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம்

நாட்டிலேயே முதல் முறையாக துணை ராணுவ வீரர்களுக்காக திருமண தகவல் வலைத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்திய துணை ராணுவ பிரிவுகளில் இந்தோ-திபெத் பாதுகாப்பு படை முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாகும். இந்தியா-சீனா இடையேயான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பணியாற்றி வரும் இந்த படையினர் மலைப்பாங்கான, பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த படையில் சுமார் 2,500 வீரர்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் திருமணமாகாமல் உள்ளனர். கடினமான பணிச்சூழலில் இருக்கும் இவர்கள், திருமணத்துக்கு வரன் தேடுவதற்காக சொந்த ஊர் செல்வது அனைத்தும் சிரமமான பணியாக உள்ளது. இதனால் தங்கள் படைப்பிரிவுக்கு உள்ளேயே திருமணம் முடித்து பணிகளை தொடர்வதை பல வீரர்கள் விரும்புகின்றனர்.

எனவே நாட்டிலேயே முதல் முறையாக இந்தோ-திபெத் படைப்பிரிவு சார்பில் திருமண தகவல் வலைத்தளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. கடந்த 9-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த தளத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதில் வீரர் மற்றும் வீராங்கனைகளின் பணி ஆவணங்களின்படி தகவல்கள் பதிவு செய்யப்படுவதால், மோசடிக்கு இடமிருக்காது என உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

SCROLL FOR NEXT