புதுடெல்லி,
சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக்கிற்கு 'கட்டாயமாக உணவளிக்க'க் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்துக்கு லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் ஆதரவு தெரிவித்ததுடன், நேரடியாக போராட்டத்தில் இணைந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இவரது உண்ணாவிரதம் நேற்று 18-வது நாளை எட்டியது. இதுவரை அவர் 8½ கிலோ எடை குறைந்துள்ளார். அவர் நேற்று மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு கட்டாயமாக உணவு வழங்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதில், அரசு இது குறித்து எந்தவித அக்கறையும் காட்டாமல் உணர்வற்ற நிலையில் உள்ளது. சமூக ஆர்வலருக்குக் கட்டாயமாக உணவு அளிக்குமாறு உத்தரவிட வேண்டும். அவரை ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மனித உடல் உயிர்வாழத் தேவையான சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய திரவ உணவை அவருக்குக் கட்டாயமாக ஊட்டுவதே செய்ய வேண்டிய எளிய நடவடிக்கையாகும். இதே நிலைமை தொடர்ந்தால் இன்னும் 2 நாட்களில் அவர் உயிரிழக்க நேரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரிக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று (வியாழக்கிழமை) நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.