தேசிய செய்திகள்

கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கனடா, ஆஸ்திரேலியாவில் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பபட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்து சேர்ந்தன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்ய முன்வந்துள்ளன.

அந்த வகையில் கனடா நாட்டில் இருந்து ஏற்கனவே வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று மேலும் 500 வெண்டிலேட்டர்கள் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே போல ஆஸ்திரேலியாவில் இருந்து 1,056 வெண்டிலேட்டர்கள், 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு இன்று வந்து சேர்ந்துள்ளன.

SCROLL FOR NEXT