புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருவதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகி வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.
இந்த சூழலை எதிர்கொள்ள இந்திய மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் சரக்கு விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வருகின்றன.
அந்த வகையில் ஐஸ்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை வந்திறங்கிய விமானத்தில் 12 ஆயிரம் ஃபேவிபிர் மாத்திரைகள், 15 வெண்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் ஐஸ்லாந்து அரசு சார்பில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.