புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தில், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். அதாவது தெலுங்கானாவில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிடாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சி முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, வேட்பாளர் மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் மீனாட்சி நடராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "இது ஜனநாயகத்தை சீர்குலைக் கும் செயல். இருப்பினும் அரசியல் சாசன அமைப்புகள் மீது எங்களுக்கு இன்னும் முழு நம்பிக்கை உள்ளது. அதனால்தான் இந்த நீதிக்கான போராட்டத்தை நடத்துகிறோம்" என்றார்.
மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி கூறுகையில், "மீனாட்சி நடராஜன் மீது சட்டப்படி எந்த ஒரு குற்றச்சாட்டோ அல்லது கிரிமினல் வழக்கோ பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் அதிகாரி ஒருத லைப்பட்சமாக இந்த தவறான முடிவை எடுத்துள்ளார். தேர்தல் கமிஷன் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும்" என்றார்.