ஜோத்பூர்,
இந்திய விமானப்படையில் தரை தாக்குதலுக்கு பெயர் பெற்றவை, மிக்-27 ரக போர் விமானங்கள். கடந்த 40 ஆண்டு காலமாக இந்திய விமானப்படையில் இந்த விமானங்கள் சேவை ஆற்றி உள்ளன.
குறிப்பாக 1999-ம் ஆண்டு, கார்கில் போரின்போது மிக்-27 போர் விமானங்கள் ஆற்றிய சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
எதிரிகளின் நிலைகளில் ராக்கெட்டுகளையும், குண்டுகளையும் வெகு துல்லியமாக வீசி அழித்து பெயர் பெற்றவை, மிக்-27 போர் விமானங்கள்.
இந்த நிலையில், மிக்-27 ரக போர் விமானங் கள் 40 ஆண்டு கால சேவைக்கு பின்னர் இந்திய விமானப்படையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றன. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 7 மிக்-27 விமானங்களை கொண்ட படைப்பிரிவு இருந்தது.
ஓய்வுபெற்றதையொட்டி, இவற்றுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி, ஜோத்பூரில் நேற்று நடந்தது. இதில் தென்மேற்கு பிராந்திய விமானப்படை தலைவர் எஸ்.கே.கோட்டியா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 1999-ம் ஆண்டு கார்கில் போரின்போது, மிக்-27 போர் விமானங்கள் முன்னணியில் இருந்து, தங்கள் மதிப்பை நிரூபித்து காட்டின என கூறினார்.