புதுடெல்லி,
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் இந்திய வங்கிகள் ரூ. 7,086.63 கோடியை அபராதமாக வசூலித்து அதிரடி காட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணைமந்திரி பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகப்படியான தொகையை அபராதமாக வசூல் செய்த வங்கிகளின் விவரம்:
எச்.டி.எப்.சி. வங்கி: முதலிடத்தில் உள்ள இந்த வங்கி மட்டும் தனியாக ரூ.1,798.14 கோடி வசூலித்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி: இரண்டாமிடத்தில் உள்ள இந்த வங்கி ரூ.1,081.33 கோடி வசூலித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி: மூன்றாவதாக இந்த வங்கி ரூ.353.50 கோடியை அபராதமாகப் பிடித்துள்ளது.
அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு அபராதத்தை ரத்து செய்திருந்தாலும், நடப்பு கணக்குகளில் இருந்து ரூ.477.27 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் கணக்கில் பணம் குறையும் போது, உடனே அபராதம் விதிக்கக் கூடாது; குறுந்தகவல் அல்லது இ-மெயில் மூலம் எச்சரிக்கை விடுத்த பிறகே வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.