ஐஸ்வால்,
ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் இந்தியாவின் வட கிழக்கு எல்லை பகுதிகளின் வாயிலாக புலம் பெயருவதைத் தடுக்க மியான்மர்-மிசோரத்திற்கு இடையேயான எல்லை பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மிசோரம் முதல்வர் லால் தன்ஹவ்லா,மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து பேசிய முதல்வர் லால் தன்ஹவ்லா பரந்த எல்லையின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
மியான்மாரிலுள்ள ராக்கினி மாவட்டத்திலிருந்து ரோஹிங்கியா அகதிகள் மற்றும் தீவிரவாதிகள் மிசோரத்தில் நுழைவதால் பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், மேலும் தற்பொழுது மியான்மர் எல்லை பகுதியில் அந்நாட்டைச் சேர்ந்த ராணுவத்தினரும், ஆரகான் தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டு வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் மிசோரத்தில் நுழைவது கவலை அளிப்பதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மியான்மர் அரசாங்கம் ஆரகான் தீவிரவாதிகளிடம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக கடந்த நவம்பர் 25 லிருந்து ஏறத்தாழ 1600 க்கும் மேற்பட்ட மியான்மரின் குடியுரிமை பெற்றவர்கள் தென் மிசோரம் பகுதியிலுள்ள லான்ங்டலாய் மாவட்டத்தை தங்குமிடமாக்கியது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.