பாட்டியாலா
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ஸ்ரீ காளிதேவி கோவிலுக்கு அருகே சிவசேனா அமைப்பை சேர்ந்த சிலருக்கும் காலிஸ்தானுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால், போலீசார் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த மோதலில், 2 போலீசார் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் பாட்டியாலா நகரில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்படுவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.