தேசிய செய்திகள்

போராட்டத்தில் வைரலான மாடல் அழகி... போலீசில் பரபரப்பு புகார்

நீட் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் போது போலீஸ் வேனை தனி ஆளாக மறித்து நிறுத்திய ரியா ஆஹிர், சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தார்.

மும்பை,

மும்பை தாதர் சிவாஜி பூங்காவில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற நீட் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்களை ஏற்றிச் சென்ற போலீஸ் வேனை தனி ஆளாக மறித்து நிறுத்திய மாடல் அழகி ரியா ஆஹிர், சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தார். அவரது துணிச்சலான செயலை பாராட்டி பலரும் பதிவுகளை பகிர்ந்தனர்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு

இந்த சம்பவத்துக்கு பிறகு, தன்னை குறிவைத்து சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக ரியா ஆஹிர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், டீப்-பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உருவாக்கப்பட்டு, தன்னை ஆன்லைனில் சித்ரவதைக்கு உள்ளாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம் போலீசில் புகார்

இதுதொடர்பாக ரியா ஆஹிர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சமூக வலைத்தளங்களில் தன்னை ஆபாசமாக விமர்சிப்பது, அநாகரிகமான கருத்துகளை பதிவிடுவது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் ஆதாரங்கள் ஒப்படைப்பு

தனக்கு எதிராக பரப்பப்பட்ட பதிவுகள், டீப்-பேக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் ரியா ஆஹிர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.