தேசிய செய்திகள்

4 ஆண்டுகளில் மோடியின் குறுகியகால உரை; சுதந்திர தின விழாவில் 75 நிமிடங்கள் பேசினார்

சுதந்திர தின விழாக்களில் மோடி அணியும் தலைப்பாகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தொடர்ந்து 13-வது ஆண்டாக செங்கோட்டையில் இன்று சுதந்திர தின உரை ஆற்றினார். அவர் 75 நிமிடங்கள் பேசினார். கடந்த ஆண்டுகளில் மோடியின் மிக குறுகிய கால உரை இதுவாகும். ஒட்டு மொத்தமாக அவர் பேசிய 4-வது குறுகிய கால உரையாகும்.

கடந்த ஆண்டு 79-வது சுதந்திர தினத்தின்போது பிரதமர் மோடி 104 நிமிடங்கள் உரையாற்றினார். இது சாதனையாகும். 2024-ன் 78-வது சுதந்திர தினத்தின்போது 98 நிமிடங்கள் பேசிய சாதனை கடந்த ஆண்டு முறியடிக்கப்பட்டது.

2024-க்கு முன்பு அவரது நீண்டலை சுதந்திர தின உரை 2016-ல் 96 நிமிடங்களாக இருந்தது. அதே சமயம் மிக குறுகிய உரையாக 2017-ம் ஆண்டு 36 நிமிடங்களாக இருந்தது.

முன்னாள் பிரதமர் நேரு அதிகபட்சமாக தொடர்ந்து 17 முறை சுதந்திர தின உரையாற்றி உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக மோடி இருக்கிறார். அவர் கடந்த ஆண்டு இந்திராகாந்தியின் 12 முறை உரையாற்றிய சாதனையை முறியடித்தார்.

கவனத்தை ஈர்த்த மோடியின் தலைப்பாகை

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தலைபாகை அணிந்து பங்கேற்று வருகிறார். இந்த ஆண்டு விழாவில் அவர், ராஜஸ்தான்-குஜராத்தி கலாசாரத்தில் பிரபலமான, பாரம்பரியமான சிவப்பு நிற டை அண்ட் டை தலைப்பாகையை அணிந்திருந்தார்.

வெள்ளை நிற குர்தா மற்றும் சாக்லேட் பழுப்பு நிற மேலங்கியை அணிந்திருந்தார். மேலும், காவி, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களிலான 3 சிறு துணித் துண்டுகளை வைத்திருந்தார். சுதந்திர தின விழாக்களில் மோடி அணியும் தலைப்பாகைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அவரது தலைப்பாகை கவனத்தை பெற்றது.