புதுடெல்லி,
நாட்டில் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் 2025-ம் ஆண்டு ஜூலை வரையிலான காலகட்டத்தில் பல்வேறு பணமோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவற்றில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 41 வழக்குகளில், 38 வழக்குகளின் மீது, பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான கோர்ட்டு தீர்ப்புகளை வழங்கி 98 பேரை குற்றவாளிகள் என அறிவித்தது.
இதனால், கடந்த 5 ஆண்டுகளில் பணமோசடி வழக்குகளில் அமலாக்க துறையின் குற்ற விகிதம் 92.68 சதவீதம் என்ற அளவில் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமலாக்க துறையின் நடவடிக்கைகள் ஒருசார்புடன் உள்ளன என எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகள், தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. குற்ற விகிதமும் குறைவாக உள்ளது என தெரிவித்தன. இந்நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.