கோழிக்கோடு,
கேரளத்தில் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நிபா, ஷிகெல்லா, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. நிபா வைரஸ் பாதித்த 43 வயதான நபருக்கு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பல நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஷிகெல்லா பாதித்து இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 186 பேருக்கு இந்த நோய் பரவியுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 108 பேர் ஷிகெல்லாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 3 நாட்களில் 37 பேருக்கு இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் தான் ஷிகெல்லா நோய் அதிகமாக பரவியுள்ளது.
இதற்கிடையே எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. திருச்சூரில் டெங்கு காய்ச்சல் பாதித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானுர் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் (எம் பாக்ஸ்) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவருடன் சேர்த்து கேரளத்தில் இந்த ஆண்டு இதுவரை 8 பேருக்கு குரங்கு காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து கேரள சுகாதாரத்துறை பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு எச்சரித்து உள்ளது.