தேசிய செய்திகள்

அஜித்பவார் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்

விபத்துக்கு காரணமாக பாராமதி ஓடுதளம் கடைசியாக 2016-ஆம் ஆண்டு தான் சீரமைக்கப்பட்டது

மராட்டிய முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி புனே அருகே பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அந்த அமைப்பு நேற்று தனது 22 பக்க முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அஜித் பவார் சென்ற விமான விபத்து நடந்த ஜனவரி 28-ஆம் தேதி காலை, பாராமதி விமான நிலையத்தில் பார்வைத்திறன் வெறும் 3 ஆயிரம் மீட்டராக மட்டுமே இருந்துள்ளது. பாதுகாப்பு விதிகளின்படி ஒரு விமானத்தை தரையிறக்க குறைந்தபட்சம் 5 ஆயிரம் மீட்டர் பார்வைத்திறன் அவசியமாகும். விதிகளை மீறி விமானத்தை தரையிறக்க முயன்றதே விபத்துக்கு முதன்மை காரணமாக பார்க்கப்படுகிறது.

Also read:விமான விபத்தில் மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் உயிரிழப்பு

விபத்துக்கு காரணமாக பாராமதி ஓடுதளம் கடைசியாக 2016-ஆம் ஆண்டு தான் சீரமைக்கப்பட்டது. ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. ஓடுதளப் பரப்பில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான ‘லியர்ஜெட்’ விமானத்தின் கருப்புப் பெட்டி பலத்த சேதமடைந்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன் அதிலுள்ள தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதில் விமானம் ஓடுதளத்தில் மோதுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு “அய்யோ... அய்யோ...” என்று விமானி பதற்றத்தில் அலறிய சத்தம் பதிவாகியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.