தேசிய செய்திகள்

குஜராத்தில் திருமண விருந்து சாப்பிட்ட 1,200 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

குஜராத்தில் திருமண விருந்து சாப்பிட்ட ஆயிரத்து 200 பேர் பல்வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மேசானா மாவட்டத்தில் சாவாலா கிராமம் உள்ளது. இங்கு ஒரு உள்ளூர் காங்கிரஸ் தலைவரின் மகன் திருமணம் நடைபெற்றது.

அதையொட்டி இரவு விருந்து நடந்தது. சைவ, அசைவ உணவுகள் தடபுடலாக பரிமாறப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்று உணவு உண்டனர்.

சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் ஆயிரத்து 200 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

விருந்தில் பரிமாறிய உணவுகளின் மாதிரியை பரிசோதனைக்காக தடயவியல் துறையினரும், உணவு மற்றும் மருந்துத் துறை அலுவலர்களும் எடுத்துச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.