லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் 6 வயது குழந்தைக்கு தாயான பெண்ணுக்கு அவருடைய கணவர் மொபைல் மூலம் முத்தலாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். அவரை ஒரு மாதத்திற்கு மேலாக வீட்டிற்குள் உணவு கொடுக்காமல் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளார். மனைவியை வீட்டிற்குள் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி லக்னோ மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி பேசுகையில், என்னுடைய சகோதரிக்கு 6 வயதில் ஒரு குழந்தையுண்டு. தொலைபேசி அழைப்பு மூலம் அவரது கணவர் விவாகரத்து செய்துவிட்டார். அது மட்டுமின்றி வரதட்சனை கேட்டு உணவு கொடுக்காமல் எனது சகோதரியை அறைக்குள் பூட்டிவிட்டார். அவர், தனது உறவினர் வீட்டுக்குப் போய்விட்டார். எனக்கு தகவல் கிடைத்தவுடன் சகோதரி இருந்த வீட்டிற்குச் சென்று பார்த்துவிட்டு பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை, என கூறியுள்ளார்.
மேரா ஹக் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பார்ஹத் நக்வி பேசுகையில், ரஸியாவின் கணவர் நஹீம் ஏற்கெனவே திருமணம் ஆனவர். இதைப்போன்ற கொடுமையை தனது முதல் மனைவிக்கும் செய்துள்ளார். மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பலனின்றி பின்னர் லக்னோவில் உள்ள பெரிய மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் பலனில்லை, இதனையடுத்து வீட்டிற்கு கொண்டுவந்த போது உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளார்.